Friday, January 28, 2011

குக்கூ

குக்கூ குழந்தைகள் வெளி நடத்த உள்ள பண்பாட்டு நிகழ்வுக்கு அனைவரையும் அழைப்பதில் பெரும் உவகை கொள்கிறேன். Feb மாதம் 1 முதல் 10 ஆம் திகதி வரை
 திருப்பத்தூரில் உள்ள வெள்ளிவாசல் என்ற மலைகிராமத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்வில் பங்கேற்றும் அந்த கிராமத்தில் தொடங்கப்பட உள்ள நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கியும் சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஓவியம் சிற்பம் புகைப்படம் மற்றும் போன்ற கலைகளின் கண்காட்சி நிகழ்வும் நடத்தப்பெற உள்ளது.

Save TN Fisherman.

Wednesday, January 26, 2011

மொழிப்போரின் மாவீரர்கள் 1

கோடம்பாக்கம் ரெயில்வே திடலில் தமிழ் காக்க தன் உடலை தீக்கு தந்து கருகிப் போன சிவலிங்கத்திற்கு வீரவணக்கம் செலுத்த ஏராளமான தி.மு.க.தொண்டர்களும் பொதுமக்களும் கூடினார்கள்.அங்கே சிவலிங்கத்தின் உடல் பற்றி எரியும்போது 'தமிழ் வாழ்க இந்தி ஒழிக'என எரியும்போதுகூட மொழி உணர்வோடு முணுமுணுத்து செத்த நிகழ்ச்சியை நேரிலே பார்த்து நெஞ்சம் பதறுகிறான் ஒரு இளைஞன்.கருகிய சிவலிங்கத்தின் உடலை பார்த்து கதறுகிறான்.




அவன் பெயர் அரங்கநாதன்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.ஒய்யாலி என்பவரின் மூன்றாவது மகன்.தாய் தந்தையை இழந்தவன்.தபால் தந்ததி துறையில் பணிபுரிபவன்.முரசொலியும் கையுமாகவே எப்போதும் திரிந்த தி.மு.கழகத்தின் தீவிர உறுப்பினன்.சிலம்பாட்டம்,மான்கொம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றவன்.தன் வயதொத்த வாலிபர்களால்'குரு'என்று அழைக்கப்பட்ட 34 வயதுள்ள இளைஞன்.


அழகு மனைவி மல்லிகா.மகன்கள் அமுதவாணன்,அன்பழகன்,ரவி என்கிற அருமைப் புதல்வர்களுடன் விருகம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் குடியிருந்தான்.


தன் கண்ணெதிரே எரிந்து கருகிப் போன சிவலிங்கத்தின் நினைவு அவன் கண்ணைவிட்டு மறையவில்லை.இரவு முழுதும் தூங்கப்பிடிக்காமல் யாருடனும் பேசாமல் அப்படியும் இப்படியுமாக நடமாடுகிறான்.தானும் தமிழுக்காக ஏதாகிலும் தியாகம் செய்யவேண்டுமே என்று தீவிரமாக சிந்திக்கிறான்.பிறகு ஒரு முடிவாக உட்கார்ந்து பேரறிஞர் அண்ணா,நாவலர்,கலைஞர்,மதியழகன் ஆகிய தி.மு.க.தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதுகிறான்.


"இந்திய அரசின் ஏகாதிபத்திய கொள்கையை எதிர்த்து நான் தீக்குளிக்கப் போகிறேன்.தமிழுக்காக நான் என்னுயிரைத் தியாகம் செய்கிறேன்."என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவு ஒரு மணிக்கு மேல் விருகம்பாக்கம் நேஷனல் திரையரங்கம் அருகே சென்று மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றித் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு தன் தேக்குமர தேகத்தை தீக்குத் தந்துவிட்டு தியாகியானான் விருகம்பாக்கம் அரங்கநாதன்.


தமிழுக்கு தன்னை அர்ப்பணித்த அரங்கநாதனுடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரனை தி.மு.கழகம் தலைமைக் கழக பிரதிநிதியாக அனுப்பி வைத்தது.மறைந்த அந்த மகத்தான தியாகியின் பெயரில் கலைஞர் அவர்கள் பாலம் ஒன்றினை சென்னையில் அமைத்தார்.அவனுடைய நினைவைப் போற்று வகையில் விருகம்பாக்கம் விநாயகா சாலையில் கல்லறை அமைக்கப்பட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

Monday, January 10, 2011

பச்சையப்பாஸ் எதிரில் பயங்கர படிப்பாளிகள்.

சென்னையின் புத்தக திருவிழாவிற்கு நானும் சென்றிருந்தேன் என்பதை காமெடியாய் பார்க்கும் நண்பர்களுக்கு சீரியசாவே சொல்றேன்,நானும் படிப்பாளிதான்யா நம்புங்கய்யா.மொதல்ல பார்க்கிங் மாட்டெரில் இருந்தே வருகிறேன்.பைக்க பார்க்கிங்க்ல போட்டு சைட் லாக் கூட பண்ணாம ரொம்பவே குதூகலத்தோடு உள்ளே நுழைந்தேன் ( நுழைவுக் கட்டணம் பெற்றுதான் ).போகும்போதே சாப்பிடுவதற்கான சமாச்சாரங்களை மனதிற்குள் குறித்துக்கொண்டே அரங்கு நோக்கி நடந்தேன்.அரங்கின் உள்ளே நுழைந்ததும் எந்தப் பக்கம் என்ன ஸ்டால் இருக்கு என்பதை பார்க்காமலேயே ( நாம என்னைக்கு மேப்பெல்லாம் பார்த்தோம் ) அப்படியே மெதுவாய் சென்றுகொண்டிருக்கையில்,சிணுங்கியது செல்பேசி.அழைப்பை ஏற்றவுடன் ஏற்கனவே அரங்கில் சுற்றிக் கொண்டிருக்கும் தோழரின் இருப்பிடத்தை அறிய முடிந்தது.நேராய் என் கால்கள் சென்று நின்ற இடம் காலச்சுவடு.அங்கு சென்றபின்தான் தெரிந்தது எழுத்தாளர் அம்பை மற்றும் கவிஞர் பெருந்தேவி ஆகியோரின் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு நடக்கவுள்ளதென்று.அம்பை அவர்களிடம் பேசிய அந்த இரண்டு நிமிடங்களும் அன்பை முழுவதும் உணர்ந்த தருணமாய் அமைந்தமைக்கு அவர்களை அறிமுகப்படுத்திய நட்பிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். நாமதான் நமக்கு தேவையில்லாத இடத்துல எப்பவும் இருக்குறதில்லையே,ஆகையால் ஒவ்வொரு கடையாய் பார்த்து ஏதோ இதெல்லாம் நம்ம அறிவுக்கு கொஞ்சம் எட்ராபோல இருக்குனு நம்பி கொஞ்சம் புத்தகங்களை வாங்கியப் பின்தான் தெரிந்தது கொண்டு வந்த காசெல்லாம் காலியென்று.கணிசமான பிரபலங்களை இத்திருவிழாவில் பார்க்க நேரிட்டதிலிருந்து ஆரோக்கியம் புலப்பட்டது.இயக்குனர்கள் விக்ரமன்,பாலாஜி சக்திவேல் இவர்களைவிடவும் பிரபலமான நிஜந்தன் போன்றவர்கள் பிரபங்களில் சிலர். ஐம்பது ரூபாய்கூட பெறுமானமில்லாத புத்தகங்களை நூற்றைம்பது,இருநூறு என விற்கும் புத்தக ஆலய "அர்ச்சகர்களுக்கு" இந்த நேரத்தில் என் கண்டனத்தை காணிக்கையாக்குகிறேன்.மிச்சமிருந்த சொச்ச காசிற்கு பாப்-கார்ன் வாங்கி சாப்பிட்டுப் பின் வாட்டர் பாக்கெட் இல்லாத காரணத்தினால் வாட்டர் பாட்டிலை வாங்கி ரெண்டு வாய் குடித்து உடனிருந்த நட்பிடம் குடிக்க கொடுத்தேன்.பின் அந்த தண்ணீர் பாட்டிலைத் திருப்பிகேட்டபோது,நான் அதை கேட்காமலே இருந்திருக்கலாம் என தோன்றிற்று.அப்போதுதான் கேள்விப்பட்டேன் புத்தக அரங்கிற்கு வெளியே நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனின் பேச்சு படு மொக்கையாம்.நமக்கேதும் பாதிப்பில்லை என்ற நிம்மதியுடன் எழுத்தாளர் அம்பையை வழியனுப்ப வாயில் நோக்கி நடக்கையில் சில சிரிப்புகள் உதிர்ந்தது.வெளியில் வந்ததும் நட்பு எகிறிப் போய் ஆட்டோ பிடிக்க,நான் அவர்களை சாந்தமாய் ஏற்றிவிட,இவ்வளவு பெரிய புத்தக சந்தையில்  கடைசி வரையும் தேடிக் கிடைக்காத சரோஜா தேவி புக்கின்றியே முடிவிற்கு வந்தது என் "புத்தகங்களைத் தேடி ஒரு பயணம்".என்னடா புத்தக திருவிழாவிற்கு சென்றவன் தான் வாங்கிய புத்தகங்களை குறிப்பிடாமலேயே செல்கிறானே எனக் கேட்பவர்களுக்கு மட்டும் இந்த கடைசி வரிகள்.வாங்கியப் புத்தகங்களை பட்டியலிட்டால் காறித் துப்புகள் அதிகமாய் இருக்குமென தெரிந்தபின்னும் சொல்வதற்கு நான் என்ன முட்டாளா?