Monday, February 7, 2011

ஏனோ என் விழியில் நீர் சுரத்தது.


சனிக்கிழைமை இரவு சென்னை கோயம்பேட்டிலிருந்து பேருந்து மூலம் திருப்பத்தூர் சென்றுகொண்டிருக்கும் வேலையில் வழக்கம்போலவே இரவை நேசித்துக்கொண்டிருந்த மணிகளில்  நான் அறிந்திருக்கவில்லை என்னுடைய இந்த பயணம்  இதுவரை எனக்கு பரீச்சயம் இல்லாத ஒன்றென்று.விடியற்காலையில் திருப்பத்தூர்,அங்கிருந்து ஒரு பேருந்து மாறி புதூர் நாடெனும் மலைகிராம்.பின் அங்கிருந்து பதினான்கு மைல்களுக்காக இன்னொரு பேருந்துமாறி கடைசியில்  நோக்கிய இடத்தை வந்தடைந்தோம்.எத்தனை இரம்மியமான சூழல்,மரங்களும் செடி, கொடிகளும், நகரத்திலேயே பிறந்து வளர்ந்த காரணத்தினாலோ என்னவோ இது போன்ற இடங்களை காணும்போதெல்லாம் வேறொரு  உலகத்தில் என் காலடி பட்டுகொண்டிருக்கிறது என்பது  போலவே நினைத்து கொள்கிறேன். பேருந்தைவிட்டு இறங்கியபோதே எங்களை அழைத்துசெல்ல வந்திருந்த தோழர் சிவராஜ் எங்களை வரவேற்று அந்த மலை கிராமத்தின் அரசு பள்ளிக்கு எங்களை அழைத்துக்கொண்டு போனார்."குக்கூ குழந்தைகள் வெளி" என்ற கிராம மாணவர்களின் அடிப்படை தேவைகளையும் அவர்களுக்கு நம் பண்பாடும் கலாச்சாரமும் சார்ந்த கலைகளையும்  பயிற்றுவிக்கும் ஒரு இயக்கம்.அந்த இயக்கத்தின் ஒரு நிகழ்விற்குதான் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.போகிற வழியில் இந்த குக்கூ அமைப்பின் நிகழ்வுகளைப்பற்றி எங்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். பள்ளிக்கு சென்ற வழியில் எதிர்வந்த அத்தனை மனிதர்களிடமும் எங்களை அவர்களிடத்தில் அறிமுகம் செய்துகொண்டே சென்றார். பள்ளியை அடைந்த பின் அங்கிருந்த குழந்தைகளை காணுகிறவரையில் தான் நாங்கள் பெரியவர்களாய் இருந்தோம். அதன் பின் நாங்கள் சீருடை அணியாத அவர்களின் சிநேகிதர்களாகவே ஆனோம்.எங்களை போன்றே இந்தியாவின் பல பகுதிகளில் வந்திருந்த ஆர்வலர்களிடத்தில் எங்களை அறிமுகப்படுத்திகொண்டு பின் இணைந்தே செயல்பட்டோம்.கவிஞர் வையம்பட்டி முத்துசாமி,ஓவியர் மற்றும் சிற்பக் கலைஞர் எழில்,நாடக கலைஞர்கள் குமார் & நந்து,இயக்குனர் குமரன் கிராமிய இசைக்கலைஞர் மற்றும் உதவி இயக்குனர் செந்தமிழ்செல்வன்,பெங்களூரு தியாகராஜன் மற்றும் அவரது நண்பர் மற்றும் அக்கா அழகேஸ்வரி மற்றும் ஏராள- மானோர் அங்கு வந்திருந்தனர். அறிமுகப்படலம் முடிந்தபின் அந்த பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள்,சிற்பங்கள் என அனைத்து படைப்புகளையும் தோழர் சிவராஜின் விவரிப்போடு கண்டு களித்தோம்.சாப்பிட அழைப்பு வந்தபோது முதல் ஆளாய் காணாமல்  போனேன்  என்ற பெருமையை இந்த தடவையும் நான்தான் பெற்றேன் என்பதில் மகிழ்வே. காலைப் பசியை  எலுமிச்சை சாதம் தீர்துக்கொண்டிருந்த போது நாங்கள் யாருமே பல் துலக்கவில்லை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.சாப்பிட்டபின் தோழர் முத்துசாமியை தனியாய் தள்ளிகொண்டு போய் அவரது பாடல்களை ( சிறுவர் பாட்டு,பொதுவுடைமை பாட்டு, கார்கில் பாட்டு மற்றும் ஏராளமான பாடல்கள் ) அவரது குரலிலேயே கேட்டது உள்ளம் நிறைந்த மகிழ்வு.பின்தான் ஞானோதயம் பெற்று குளிக்க சென்றோம்.அந்த மலைகிராமத்தில்தான்  எங்களின்  சுதந்திரங்களை பல விதங்களில் உணர்ந்தோம்.குளித்துவிட்டு மீண்டும் குழந்தைகளோடு ஆடல்,பாடல்.அத்தனை மாணவர்களையும் ஒன்றாய்  பார்த்ததில் இந்தியாவின் இந்த மலைபிரதேசத்தில்  ஒரு இளவரசர்களின்  கூட்டமும், அதற்கு இணையான ஒரு இளவரசிகளின் கூட்டமும் காணமுடிந்தது மிகவும் எதிர்பாராத ஒன்று.பின் மதிய சாப்பாடு முடிந்த பின் மாலைநேர  விழாவுக்கு தயாரானது எல்லோர் தரப்பும்.விழாவில் அனைத்து நாடகங்களையும், ஆட்டங்களையும்,கடவுள் வாழ்த்தையும் அந்த மாணவர்கள்  செயல் படுத்திய நேர்த்தியில் தான்,அக்கா அழகேஸ்வரி, குமார்,நந்து, செந்தமிழ்செல்வன், குமரன், எழில், சிவராஜ் மற்றும் ஏனையோர்களின்  உழைப்பும் பொறுமையும் எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.அந்த குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் நிகழ்வில் தங்களை இணைத்துக்கொண்ட அத்தனை பேருக்கும்  நன்றியும் ஒரு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது,என்னை அழைத்து எங்களுக்கு பொங்கிப்போட்ட  கைகளுக்கு பரிசளிக்க சொன்னபோது ஏனோ என் விழியில் நீர் சுரத்தது.

No comments:

Post a Comment